Thursday, February 28

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி நிர்மாணப் பணியில் தொடர்கிறது மர்மம்?


கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியின் நிர்மாண பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வின்போது திரைநீக்கம் செய்யப்பட்ட வீதியமைப்பு நினைவுப்படிகம் மற்றும் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. 
கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதே பொருத்தம் என பெரும்பாலோரினது கருத்தாகும். அதற்கான நியாயமான காரணங்களையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 
மேலும் கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதற்கு கடந்த மாகாண சபை ஆட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் முன்மொழிவினை செய்தாகவும் அதற்கான அனுமதியினை மாகாண வீதி அமைச்சு வழங்கியதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறிருக்கையில் இவ்வீதி திடீரென கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டு நேற்று அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
 
இதனை கேள்வியுற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் இந்நிகழ்வுக்கு அழைப்பில்லாமல் கலந்து கொண்டு, ஏற்பாட்டுக் குழுவிடம் அனுமதி பெற்று பேசியதாக தெரியவருகிறது. 
அவர் அங்கு உரையாற்றும்போது, கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதற்கு கடந்த மாகாண சபை ஆட்சியில் நானே நடவடிக்கையினை மேற்கொண்டேன். அதற்கான அனுமதியினை அதன் அமைச்சராக அப்போதும், இப்போதும் இருக்கும் உதுமாலெவ்வை வழங்கினார். அவ்வாறு இருக்கையில் ஏன் திடீரென காபெட் வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றப்படுகின்றது. இதன் மர்மம் விளங்கவில்லை.
கடற்கரைப்பள்ளி வீதிக்கு காபெட் இடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அக்கரைப்பற்;றுக்கு மாற்றப்பட்டதாக கேள்வியுற்றேன். எவ்வாறாயினும் கடற்கரைப்பள்ளி வீதி கொங்கிறீட் வீதியாக நிர்மாணிப்பதை விட காபெட் வீதியாக நிர்மாணிப்பது சிறந்தது என பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 
இந்நிலையிலேயே இனந்தெரியாதோரினால் இந்த நினைவுப்படிகமும் பெயர்ப்பலகையும் அன்று நள்ளிரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.
ஜெய்க்கா வீதி அபிவிருத்தித் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் 39 மில்லியன் ரூபா செலவில் 1700 மீற்றர் நீளமான கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியின் நிர்மாணப் பணிக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதன் நினைவுப்படிகம் மற்றும் பெயர்ப்பலகைகள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் திரைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்க்கது.



No comments:

Post a Comment