Thursday, March 28

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம் கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும், திணைக்களங்களிதும் நேர்முகப்பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட அமைச்சு, திணைக்களம் நேர்முகப் பரீட்சைக்காக பட்டதாரி பயிலுனர்களை அழைக்கும் போது தகுதியானவர்களை அனுப்பாது தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களையும் மாத்திரமே சம்பந்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் அனுப்பி வருவதாகவும், இதன்காரணமாக தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, இமத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக்கூறிவருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் காட்டப்படும் பாரபட்சமானது மனவேதனையளிப்பதாகவும் சம்பந்தப்பட்டோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அம்பாறை மாவட்ட இணைப்புக்குழுத் தலைவர், அரசாங்க அதிபர் ஆகியோர்களிற்கு மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிர்வாக உத்தியோகத்தரின் இவ்வாறான பாரபட்சமான செயற்பாடு காரணமாக பிரதேச செயலாளரிற்கும், பிரதேச செயலகத்திற்கும் களங்கம் ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

(அத தெரண நிருபர்)

No comments:

Post a Comment