Tuesday, June 25

ஹரீஸ் எம்.பி. வங்குரோத்து அரசியல் செய்யும் நிலையில் இல்லை - ஏ.ஏ.பஷீர்



மாநகர சபை உறுப்பினர் முபீத்தினால் பாலர் பாடசாலைக்கு காலையில் வைத்த அடிக்கல்லை உடைத்தெறிந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாலையில் நீதியமைச்சரைக் கொண்டு வந்து மீண்டும் பாலர் பாடசாலைக்கு அடிக்கல் வைக்கும் அளவுக்கு முஸ்லிம் காங்கிரசோ, ஹரீஸ் எம்.பியோ வங்குரோத்து அரசில் செய்யும் நிலையில் இல்லை என்பதுடன் மாநகர சபை உறுப்பினர் முபீத் விடயம் அறியாமல் மனநோயாளி போல் உளரியிருப்பதைப் பார்க்கும் போது தாம் கவலையடைவதாக கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் இந்நாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் தெரிவித்துள்ளார்.


மாநகர சபை உறுப்பினர் முபீத் பாலர் பாடசாலைக்கு காலையில் வைத்த அடிக்கல்லை ஹரீஸ் எம்.பியின் குண்டர்கள் உடைத்தெறிந்து விட்டு மாலையில் நீதியமைச்சரைக் கொண்டு வந்து மீண்டும் பாலர் பாடசாலைக்கு அடிக்கல் வைத்ததாக கூறி ஊடகங்களுக்கு மாநகர சபை உறுப்பினர் முபீத் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர சபையின் நிதிக்குழு அங்கீகாரம் வழங்காத நிதி ஒதுக்கப்படாத பாலர் பாடசாலை ஒன்றுக்கு மாநகர சபை உறுப்பினர் முபீத் திடீரென அடிக்கல்லை வைத்து நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையின் அபிவிருத்தியினை தடுக்க முற்பட்டுள்ளார். இவர் ஹரீஸ் எம்.பியின் அபிவிருத்தியை தடுப்பதாக எண்ணி தனக்கு வாக்களித்த நற்பிட்டிமுனை மக்களின் அபிவிருத்தியைத் தடுக்க முனைந்துள்ளார். இவரின் இச்செயலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயுர்வேத வைத்தியசாலை நிர்மாணத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் சட்ட விரோதமாக நுளைந்து மாநகர சபை உறுப்பினர் அடிக்கல் வைத்ததனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, முதல்வர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் வைத்த அடிக்கல்லினை அகற்றினாரே தவிர ஹரீஸ் எம்.பியின் குண்டர்களால் அவர் வைத்த அடிக்கல் உடைத்தெறியப்பட்டதாக கூறியிருப்பது முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைப்பது போன்றாகும். இவற்றை புரியாத அளவுக்கு கல்முனை மக்கள் மடையர்களல்லர்.

முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் அரசின் செல்லப் பிள்ளைகளாகவோ, ஊது குழலாகவோ இருந்திருப்பின் அமைச்சர் றிசாட், அமைச்சர் அதாவுல்லா, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை போன்றவர்களைவிட கூடுதலான நிதியினை கல்முனை அபிவிருத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்குள் இருந்து கொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக அரசின் செயற்பாடுகளை நேரடியாக எதிர்த்து வருகின்றது. ஆனால் இவர்களோ வாய்மூடி மௌனியாக
இருக்கின்ற போது இவர்களுக்கு சன்மானமாக அரசு அபிவிருத்திற்காக நிதியினை கூடுதலாக ஒதுக்கீடு செய்கின்றது. அதற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு அவை மறுக்கப்படுகின்றது. இது எமது மக்களுக்கு தெரிந்திருக்கின்ற போது எப்படி முபித்துக்கு தெரியாமல் போனது என்பது புரியாத புதிராக உள்ளதுடன் இதில் அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது.

ஹரீஸ் எம்.பியின் 'திதுலன கல்முனை' ஒளிரும் கல்முனை அபிவிருத்தி திட்டத்தினால் கல்முனை மாநகர பட்டிதொட்டி, மூலை முடுககெல்லாம் மக்கள் அபிவிருத்தி பெருவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாநகர சபை உறுப்பினர் முபீத் ஹரீஸ் எம்.பியின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த முனைகிறார் என்பது இவரின் உண்மைக்கு
புறம்பான ஊடக அறிக்கை மூலம் புலனாகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment