Thursday, May 16

கல்முனை சுனாமி வீட்டுத் திட்ட வழக்கு விசாரணைகள் 20ஆம் திகதி வரை ஒத்திவைப்பு



கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
174 வீடுகளை கொண்ட கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தின் கழிவினை அகற்றுவதற்கான திரிட்மன் பிளானட் எனும் இயந்திரத்தை இயக்குவது தொடர்பில் கடந்த பல வருடங்களாக சர்ச்சை நிலவுகின்றது. இதனால் குறித்த சுனாமி வீட்டுத் திட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். 

இது தொடர்பில் கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் ஆகியோரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சனினால் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் லியாகத் அலி, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் ஆஜராகினர்.இதன்போது வீட்டுத் திட்டம் தொடர்பான சகல ஆவணங்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை பிரதேச செயலாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
 
முறைப்பாட்டாளர் சார்பாக சட்டத்தரணி எம்.ஹாதீம் மற்றும் குடியிறுப்பாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி சாரிக் காரியப்பர் ஆஜராகினார். இதேவேளை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் குறித்த சுனாமி வீட்டுத் திட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை நேரடி விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment